Thursday 3 July 2014

ஜப்பான், சீனாவிடம் இந்தியா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்:அமர்த்தியா சென்

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2014
16:08
லண்டன்: பொருளாதார வளர்ச்சி குறித்த விஷயத்தில், ஆசிய நாடுகளான ஜப்பான் மற்றும் சீனாவிடம் இருந்து இந்தியா ஏராளமான பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்று, நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் கூறி உள்ளார்.
லோக்சபா தேர்தலின் போது, மோடி பிரதமராவதற்கு அதிருப்தி தெரிவித்திருந்த அமர்த்தியா சென், தேர்தலுக்கு பின், தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டுள்ளார். ஜனநாயகத்தின் அடிப்படையில் மோடி பிரதமராக ஆட்சி புரிவதற்கு எல்லா உரிமைகளும் அவருக்கு உண்டு என்று அவர் கூறி உள்ளார். லண்டன், ஏசியா ஹவுசில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய அமர்த்தியா சென், 'இந்தியாவில், ஒரு துடிப்புமிக்க புதிய அரசு பதவி ஏற்றுள்ளது. குஜராத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, மாற்றங்கள் உண்மையிலேயே வியக்க வைக்கின்றன. கட்டமைப்பு, சாலை மேம்பாடு ஆகியவை அங்கு சிறப்பாக உள்ளன. அதேவேளையில், மத்தியில், சுகாதாரம் மற்றும் கல்வி மேம்பாட்டில் அரசு கவனம் செலுத்த வேண்டும்,' என்றார்.
மேலும், ஊழல் ஒழிப்பில் மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ள அமர்த்தியாசென், 'மோடி அரசு பொறுப்பேற்ற பின்னர் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றாலும், அது இப்போதைய தேவைக்கு போதாது என்ற நிலையிலேயே உள்ளது,' என்றார்.
மதச்சார்பின்மை குறித்து குறிப்பிட்ட அமர்த்தியா சென், 'மோடி அரசு பெரும்பான்மை பெற்றுள்ளது என்றாலும், சிறுபான்மையினரின் நலனையும் அது கருத்தில் கொள்ள வேண்டும். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. மதச்சார்பின்மை கொண்டது. இங்கு வாழும் ஒவ்வொரு மக்களும் தங்கள் கருத்துக்களை சொல்ல முழு உரிமை உள்ளது, பொருளாதார வளர்ச்சி குறித்த விஷயத்தில், ஆசிய நாடுகளான ஜப்பான் மற்றும் சீனாவிடம் இருந்து இந்தியா ஏராளமான பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும்' என்றார்.thanksdinamalar.

கட்டட விபத்து; ஆராய ஒருநபர் கமிஷன்

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2014
12:57
சென்னை: 55 பேர் உயிரை பலி வாங்கிய காஞ்சிபுரம் மாவட்டம், கட்டட விபத்து தொடர்பாக விசாரிக்க ஒருநபர் கமிஷன் அமைத்து முதல்வர் ஜெ., உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் .

இது குறித்து தமிழக முதல்வர் ஜெ., கூறியிருப்பதாவது: ஸ்ரீபெரும்புதூர் வட்டம், மவுலிவாக்கத்தில் தனியாரால் கட்டப்பட்டு வந்த 11 மாடிக் கட்டடம் 28.6.2014 அன்று மாலை இடிந்து விழுந்ததையடுத்து, எனது உத்தரவின் பேரில், இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்டெடுக்கும் பணிகளும், காயமடைந்த தொழிலாளர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதுவரை 27 பேர் மீட்கப்பட்டு அவர்களுக்கு உயர் தர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் துயரச் சம்பவத்தில் 55 பேர் உயிரிழந்துவிட்டனர். இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 7 லட்சம் ரூபாயும், வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும் வழங்க நான் உத்தரவிட்டதோடு, உயிரிழந்தவர்களின் உடல் களை தமிழ்நாடு அரசு செலவில் அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லவும் உத்தர விட்டேன். காயமுற்றோருக்கு தலா 50,000 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.

கட்டடம் இடிந்து விழுந்த இடத்தை 29.6.2014 அன்று நேரில் பார்வையிட்டு, இதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது காவல் துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இத்துயரச் சம்பவம் நடைபெற்றதன் காரணம் , இனி மேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயவும், நீதியரசர் ரெகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தினை அமைக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

1. 28.6.2014 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், மவுலிவாக்கத்தில் அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததன் விளைவாக 55 பேர் உயிரிழந்தது மற்றும் பலர் படுகாயமடைந்த துயரச் சம்பவத்திற்கு காரணமான அனைத்து அம்சங்கள் மற்றும் சூழ்நிலைகள்.

2. பல கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழப்பதற்கு காரணமான சம்பவம் யாருடைய அலட்சியப் போக்கினால் நடந்தது என்பதை கண்டறிந்து, அதற்கு பொறுப்பானவர்களை முடிவு செய்தல்.

3. இனி வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறா வண்ணம் தடுக்கும் வகையில், கடை பிடிக்க வேண்டிய தீர்வு முறைகளை பரிந்துரை செய்தல்; ஆகியவற்றை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கையினை அளிக்கும்.விசாரணை ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் எனது தலைமையிலான அரசு மேல் நடவடிக்கைகளை எடுக்கும்.

இவ்வாறு முதல்வர் ஜெ., கூறியுள்ளார்.thanksdinamalar.